கிட்னி பாதிப்பால் தற்கொலை செய்த மகன்... அதிர்ச்சியில் தாயும் தற்கொலை செய்த பரிதாபம்...
கிட்னி பாதிப்பால் விரக்தியடைந்து தற்கொலை செய்த மகனை பார்த்து தாயும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காரகுப்பம் பகுதியை சேர்ந்த பூபதி ஹைதரபாத்தில் உள்ள துணி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், பிரேம்குமார், புனித் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் மூத்த மகன் பிரேம்குமார் கிட்னி பாதிப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து பிரேம்குமாருக்கு அவரது தாயிடம் இருந்து கிட்னி பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பிரேம்குமாருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடியாது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேம் குமார் நேற்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தனது மகனின் மீது மிகுந்த அன்பு கொண்ட தாய் கஸ்தூரி மகன் தற்கொலை செய்துகொண்டதை கண்டு கடும் மன வேதனையில் அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இரவு வீட்டிற்கு வந்த இரண்டாவது மகன் தனது அண்ணனும், தாயும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இரண்டு பேரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் நல குறைவால் மகனும், வேதனையில் தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பம் கிராம மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.