''சிறப்புப் பேருந்துகளில் பயணிகள் பாதுகாப்பு முக்கியம்'' முதலமைச்சர்!

தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் பயணிகள் பத்திரமாக செல்வதை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அதிகாலை வாணியம்பாடி அருகே அரசு விரைவு பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் 63 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் போக்குவரத்து துறைக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

வாணியம்பாடி அருகே அரசு விரைவு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து  குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் கவனத்துடனும் பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்லவும் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து பேருந்துகளிலும் குறிப்பிட்ட வேக வரம்பிற்கு கட்டுப்பட்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் , பேருந்து ஓட்டும் போது கவன சிதறல்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அனைத்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் பேருந்துகளை கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.