மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்து புதிய டேட்டா கார்டுகளை வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்தும் புதிய டேட்டா கார்டுகளை வழங்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்து புதிய டேட்டா கார்டுகளை வழங்க வேண்டும்:  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அந்த அறிக்கையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து கல்வியில் புரட்சியை ஏற்படுத்தினார். அம்மா அவர்களின் அரசும் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வியில் திமுக ஆட்சியில் 2010 – 2011 ஆம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை தற்போது 51.40 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

 இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. பெரிய மாநிலங்களுடன் குறிப்பாக கேரளாவுடன் போட்டி போட்டு தமிழகம் உயர் கல்வியில் பெரும் வளர்ச்சியைப் பற்றி இந்தியாவிலேயே தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதற்கு அதிமுக 30 ஆண்டுகால ஆட்சியின் மாட்சியே காரணம்.

 கடந்த 10 ஆண்டுகளில் 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 7 சட்ட கல்லூரிகள் மற்றும் 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வி துறையின் மூலம் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்குதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் போன்ற பல நலத்திட்டங்களே காரணம்.

 கடந்த ஆண்டு கோவிட் தொற்றின் காரணமாக தமிழக கல்லூரிகள் வகுப்புகளை நடத்த முடியாத சூழலில் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தின. இதில் பல மாணவ மாணவிகளால் பங்கேற்க முடியவில்லை. முக்கியமாக அனைத்து மாணாக்கர்கள் அல்லது அவர்களது பெற்றோர்கள் ஆண்ட்ராய்டு கைப்பேசியை அல்லது அரசு வழங்கிய மடிக் கணினி வைத்திருந்தாலும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள டேட்டா கார்டு வாங்க இயலாத நிலையில் இருந்தனர்.

 இந்த நிலையில் கடந்த முறை அதிமுக ஆட்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயின்ற சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா உடன் கூடிய தரவு அட்டைகளை வழங்க உத்தரவிட்டது. தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்பில் பயின்றார்கள்.கலை அறிவியல் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது. பிற ஆண்டு மாணவர்களும் ஆன்லைனில் பயில்கிறார்கள்.

 கோவிட் தொற்று இன்னும் முழுமையாக குறையாத காரணத்தால் இந்த ஆண்டும் கல்லூரிகள் திறக்கப்படுமா? நேரடி வகுப்புகள் நடைபெறுமா? அல்லது ஆன்லைன் வாயிலாகத்தான் கல்வி கற்க வேண்டுமா? என்று புரியாமல் நமது மாணவ செல்வங்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, கல்வி நிறுவனங்கள் தற்போது செயல்படவில்லை என்றாலும் மாணவர்களின் சிலர் இந்த ஆண்டுக்கான இணையவழி, இணையவழி நூலகம், கூகுள் சர்ச் போன்ற முறைகளில் தரவிறக்கம் செய்து பயின்று வருகிறார்கள்.

அம்மா அரசால் வழங்கப்பட்ட விலையில்லா தரவு அட்டைகள் இந்த ஆட்சி வந்தபிறகு புதுப்பிக்கப்படாததால் மாணவர்கள் இணையவழி பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

 தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாதம் ஒன்றுக்கு சுமார் 200 ரூபாய் முதல் அதிகபட்சம் 400 ரூபாய் வரை செலவு செய்து அம்மாவின் அரசு வழங்கிய தரவுகளை புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள் தொடர்ந்து சிறந்த கல்வியை பெறவும், அவர்கலின் கல்வி திறனை மேம்படுத்தவும் திமுக அரசு ஏற்கனவே அம்மா அரசால் வழங்கப்பட்ட 2ஜிபி தரவுகளை புதுப்பித்தும் இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு புதிய அட்டை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.