சுப்பிரமணிய சுவாமி கோயில் வைரத் தேரோட்டம்...!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு நிகழ்வாக வைரத் தேரோட்டம் நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இவ்விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

இதையும் படிக்க : மகாதீபக் கொப்பரையில் இவ்வளவு சிறப்புகளா? எத்தனை நாள் எரியும் திருவண்ணாமலை தீபம்?

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 7:45 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதையாத்திரை ஆக வந்தடைந்தனர். அவர்கள் இன்று காலையில் தேரோட்ட விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இந்த சிறிய வைர தேரானது ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது. 

இதனைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலை மீது மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னர் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.