திருச்செந்தூர் கடலில் குளிக்கும்போது விழுந்த தாலிச்செயின்... தேடிக் கண்டுபிடித்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள்...
திருச்செந்தூர் கடலில் குளிக்கும்போது தவறி விழுந்த 5 சவரன் தாலி சங்கிலியை சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் கண்டுபிடித்து பக்தரிடம் கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த மதுசூதனன், தனது மனைவி அங்கையர்கன்னியுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனத்திற்கு முன் கடலில் புனித நீராடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கையர்கன்னியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயின் கடலில் தவறி விழுந்து விட்டது. கடல்பகுதியில் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் கணவன் மனைவி மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகினர்.
இதனைத்தொடர்ந்து திருச்செந்தூரை சேர்ந்த ஜான், முருகன் தலைமையில் கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் தாலி செயினை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடி தாலி செயினை கண்டுபிடித்து காவல்துறையினர் முன்னிலையில் அங்கையர்கன்னியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினரை காவல்துறையினர், பொதுமக்கள், மற்றும் பக்தர்கள் பாராட்டினர்.