உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம்...!
கபடி விளையாடி கொண்டிருந்த வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம்..!
பண்ருட்டி அருகே கபடி விளையாடி கொண்டிருந்த வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கபடி வீரர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புறங்கனி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி வீரரான இவர் கடந்த 24ஆம் தேதி இரவு கபடி விளையாடி கொண்டிருந்தபோது மைதானத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு, தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில், மாநில தலைவர் சோலையம் ராஜா ஆறுதல் கூறி, ரூ 4 லட்சம் நிவாரணம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், கடலூர், சிறு தொண்டமாதேவி கபடி கழகம் ரூ 80000, மொத்தம் ரூ.4,80,000 வழங்கப்பட்டது.
அப்போது மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சோலையம்ராஜா, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ரூ 3 லட்சம் நிவாரணம் அறிவித்து இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விமல்ராஜ் குடும்பம் மிகவும் ஏழ்மையாக உள்ளது. தமிழக அரசு, அவரது சகோதிரி நந்தினியின் கல்வி தகுதியை அடிப்படையாகக் கொண்டு, அரசு வேலை வழங்கி உதவிட வேண்டும். இது தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு வழங்க நாங்கள் தயராக இருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த கபடி வீரரின் சகோதரியின் கல்லூரி படிப்பிற்கான செலவை, சேலம் சாமி அகாடமி சார்பாக ஏற்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.