யூகேஜி மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எச்.தொட்டம்பட்டியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை மாணவ மாணவிகள் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள்.

அரூர் பெரியார் நகரை சேர்ந்த அன்பரசனின் 4 வயது மகன், அதே பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற  சிறுவனை அப்பள்ளியில் ஆசிரியாராக பணியாற்றும் கல்பனா என்பவர் இச்சிறுவனை காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில், சிறுவனுக்கு முதுகு பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அச்சிறுவன் தனது தாயாரிடம் கூறமால் இருந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு செல்ல சிறுவனை குளிக்கவைக்கும் போது சிறுவனின் முதுகில் காயம் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்பொழுது சிறுவனிடம் காரணம் கேட்ட பொழுது உண்மையை கூறியுள்ளார்.

தனது மகன் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் குறித்து சிறுவனின் தந்தை அன்பரசு, அரூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.