காதல் கணவருடன் தகராறு : திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த பெண் திருமணமான மூன்றே மாதத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்துள்ளார். 

காதல் கணவருடன் தகராறு : திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பு சேர்ந்த மரியம் மிக்கேல் என்ற கட்டுமான தொழிலாளியின் மகள் லிசா.  இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விஷ்ணு என்பவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் இருவரும் மார்த்தாண்டத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் லிசா கர்ப்பமானார்.

இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதில் காதல் கணவன் விஷ்ணு லிசாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த லிசாவை பெற்றோரிடமும் செல்லவிடாமல் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், கடந்த வாரம் மார்த்தாண்டம் வீட்டில் வைத்து லிசா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் சத்தமிட்டு காப்பாற்றுங்கள் என்று கத்தியதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 80 சதவீத தீக்காயங்களுடன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ, தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.