"டாஸ்மாக் பார் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்களுக்கான டெண்டர் விடப்படும்" - அமைச்சர் முத்துசாமி .
மதுக்கடைகளில் நிலவும் பிரச்சனைகளை சரி செய்ய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, 28 சுய உதவி குழு பெண்களுக்கு ரூபாய் 2.14 கோடி வங்கி கடன் உதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும், அதை சீர் செய்ய பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். டாஸ்மாக் பார் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அது தொடர்பா் தீர்ப்புக்கு பிறகு பார்களுக்கான டெண்டர் விடப்படும் என்றார். மேலும் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்சனைகள், டாஸ்மாக் கடைகளில் இட வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஒழுங்குபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும், அதன்படி தான் பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன எனவும் தெரிவித்தார். அதோடு, ”பத்திரிகையாளர்களிடமும் இது குறித்து கருத்து கேட்கிறோம்; ஆனால் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன; எங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டும்”, என்றார்.
விரைவில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க எண்ணி உள்ளதாகவும் தெரிவித்தார். திமுக ஆட்சியின் தமிழகத்தில் 24 938 பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு 1509 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது அவர்களது சேமிப்பு ரூபாய் 265.16 கோடி ஆகும் ஈரோடு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 366 குழுக்கள் உள்ளன.
அதில் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் அவர்களுக்கு வங்கி கடன் சுய தொழில் செய்ய வழங்கப்படுகிறது ஈரோடு சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில் 3 ஏக்கர் நிலம் எல்காட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம் மேலும் 8 ஏக்கர் நிலம் வழங்க ஆய்வு நடக்கிறது என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | ”திமுகவை அரசியல் ரீதியாக முடக்க நினைக்கிறது பாஜக” அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு!