அரசுப் பேருந்தில் மாணவர்களிடையே மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!!

அரசுப் பேருந்தில் மாணவர்களிடையே மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடிக்கடி தகராறு:

சங்கரன்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருவேறு பிரிவை மாணவர்கள் சென்றுள்ளனர்.

மாணவிகளை தள்ளி விட்டதாக கூறி சண்டை:

கச்சேரி ரோடு அரசு பெண்கள் பள்ளி அருகே பேருந்து நின்றபோது, அதிக கூட்டம் காரணமாக பேருந்துக்குள் நின்றிருந்த மாணவிகளை ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அப்போது, இருபிரிவை சேர்ந்த மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டதால் ஒட்டுனர் பேருந்தை பாதியிலேயே நிறுத்தி உள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்:

இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுதீர், தாக்குதலுக்கு உள்ளான மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தியதுடன், தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிய மாணவர்களை தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.