அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்கிறார்... திருமாவளவன் மீது அண்ணாமலை கடும் தாக்கு...

திருமாவளவன் கண்ணாடி கூண்டில் இருந்துக் கொண்டு கல் எறிகிறார் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்கிறார்... திருமாவளவன் மீது அண்ணாமலை கடும் தாக்கு...

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, விசிக மற்றும் திமுக கட்சிகளை சரமாரியாக சாடினார்.

அரசியலமைப்பு சட்டங்களை பாஜக அரசு அவசர சட்டங்கள் மூலமாக அழிக்கிறது. இந்த நிலையில் பாஜகவினர் அம்பேத்கர் நினைவு நாளை போற்றுவது வேதனை அளிக்கிறது என்று திருமாவளவன், பாலகிருஷ்ணன் போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனரே என்று செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர் ''திருமாவளவனைப்போல, பாலகிருஷ்ணனைப்போல அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கட்சி பாஜக இல்லை. அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் என்பவர் வியாபாரப் பொருள் மட்டும் தான். கட்டாயம் அதையெல்லாம் தாண்டி எஸ்சி, எஸ்டி சட்டம் என்பது மிக முக்கியமான சட்டம். அந்த சட்டத்தில் காங்கிரஸ் அரசு 10 வருஷமாக சேர்க்கப்படாத விஷயங்களை நாம் ஆட் பண்ணி இருக்கோம். யாரையாவது கட்டாயப்படுத்தி மொட்டை அடிக்க வைத்தால் அது குற்றம். ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை போட்டால் குற்றம். இதைப்போன்று புதிதான சில விஷயங்களை கூட அந்த சட்டத்தில் பாஜக கொண்டு வந்திருக்கிறது.

பட்டியல் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் என்ற அற்புதமான மனிதரை நாட்டின் குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்த கட்சி இந்த பாஜக. இது போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எடுத்துக்காட்டாக சொல்லிக் கொண்டிருக்க முடியும். அப்படி இருக்கும்போது, அம்பேத்கரை வைத்து வியாபாரம் மட்டும் செய்யக்கூடிய கட்சி திருமாவளவனுடைய கட்சி.

குறிப்பாக ஜிஎஸ்டி சட்டத்தைப் பற்றியே தெரியாமல் 5 வருடம் ஜிஎஸ்டி பற்றி பேசியவர் அவர். திருமாவளவன் மறுபடியும் அவர் அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறை முழுமையாகப் படித்துவிட்டு வந்து பாஜக பற்றி குற்றம் சொல்லலாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மோடியோ, அமித்ஷாவோ சேர் மேல் நடந்துபோய் காரில் ஏறி பார்லிமெண்ட்டுக்கு போவது கிடையாது. அந்த மாதிரி போய்விட்டு கண்ணாடி கூண்டிலிருந்து கொண்டு கல் எறிந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன் என்றார்.