அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன..? முக்கிய முடிவு இன்று எடுக்கப்படுமா..? முதலமைச்சர் இன்று ஆலோசனை...

உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். அப்போது பள்ளிகள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன..? முக்கிய முடிவு இன்று எடுக்கப்படுமா..? முதலமைச்சர் இன்று ஆலோசனை...

தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால், தமிழகத்தில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆனாலும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், உயிரியல் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தடை, நீச்சல்குளங்கள், மதுபான பார்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட சிலவற்றை திறக்க தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுதினம் காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வரும் 23ம் தேதி முதல் தமிழகத்தில், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர்ர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

தமிழகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதிக்கலாமா? மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கலாமா? நீண்டநாட்களாக திறக்கப்படாமல் உள்ள பள்ளிகளை எந்த தேதியில் இருந்து திறக்கலாம் என்பன குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை இன்று மாலை அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.