” முதலமைச்சர் முதலில் தமிழ்நாட்டுக்காக பேச வேண்டும்” - சீமான்

” முதலமைச்சர் முதலில் தமிழ்நாட்டுக்காக பேச வேண்டும்” - சீமான்

ஸ்பீக் பார் இந்தியா என்ற தலைப்பில் பேசும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முதலில்  தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்  தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.  

இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து சீமான் மீது  எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு  கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது. இதன்படி இன்று காலை  ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார்.

 அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். பின்னரும் வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து சீமான் தான் தங்கி இருக்கும் அடக்கி சென்று விட்டார். பின்னர் மீண்டும் பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது.  

வழக்கை விசாரித்து நீதிபதி அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்தார். இதனை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் 

” ஸ்பீக் ஃபார் இந்தியா என்பதெல்லாம் இருக்கட்டும்... முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து பேச வேண்டும்”,  என  கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், நாளை விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்த பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக இருப்பதாக கூறினார். 

மேலும்,  கர்நாடக மாநிலத்தில் பிஜேபியும் காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கின்றனர்.  ஆனால், தண்ணீர் திறந்து விட மறுக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக திமுக தமிழகத்தில் வாக்கு சேகரிக்கிறது என்று குற்றம் சாட்டினார். 

மேலும் இந்தியா கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் சனாதனத்தை ஆதரிப்பதாகவும் அந்த கூட்டணியில் திமுக ஏன் இருக்க வேண்டும்..  கூட்டணியில் இருந்து திமுக விலக  வேண்டும் என்றும் கூறினார்.  ராகுல் காந்தி ஏன் சனாதனம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க   | "சனாதன சக்திகளுக்கு பணிவிடை செய்யும் அண்ணாமலை.! " - விசிக தலைவர் திருமாவளவன்