தேசிய வங்கி மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ...!

தேசிய வங்கி மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ...!

சென்னை அருகே வெட்டுவாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக யுனிவர்சல் சோம்போ, டிடிகே தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் முழு உடல் பாதுகாப்பு காப்பீடு செய்து உள்ளார்.

இதற்காக அவர் 7,682 ரூபாய் பிரீமியம் தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் செலுத்தி உள்ளார். இந்த காப்பீடு 2012 ஜூலை மாதம் வரை செல்லுபடியாகும். இந்நிலையில் பாலசுப்பிரமணியனுக்கு இருதய கோளாறு ஏற்பட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.4.73 லட்சம் பாலசுப்பிரமணியனுக்கு செலவாகி உள்ளது. அந்த ரசீதுகளை காப்பீடு நிறுவனங்களில் சமர்ப்பித்து  காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால் காப்பீடு நிறுவனங்கள், பாலசுப்பிரமணியனுக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்துள்ளதாக கூறி, காப்பீடு தொகையை தர மறுத்துள்ளனர். இதையடுத்து அவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து  ஆண்டுதோறும் பிரிமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்து வந்துள்ளார். காப்பீடு நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றி பிரீமியம் தொகையைப் பெற்றுக் கொண்டு, தற்போது அவருக்கு காப்பீடு வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.

எனவே பாலசுப்பிரமணியனுக்கு சேர வேண்டிய காப்பீடு தொகை ரூ.4.73 லட்சம்  மற்றும் அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ. 1 லட்சம் மற்றும் வழக்கு செலவுக்கான தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காப்பீடு நிறுவனங்களான யுனிவர்சல் சோம்போ, டிடிகே ஆகியோர் இணைந்து ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.