வசை பாடுபவர்களையும் வாழ்த்த செய்யும் அரசு தமிழக அரசு .. அமைச்சர் சேகர் பாபு ...!!
வசை பாடுபவர்களையும் வாழ்த்த செய்யும் அரசாக முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வரும் அரசு உள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே, ஜதி பல்லக்கு ஊர்வலத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கா.பாண்டியராஜன் , தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறிகையில்,
வசை பாடுபவர்களையும் வாழ்த்த செய்யும் அரசாக முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வரும் அரசு உள்ளது. முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, நீதிபதிகள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது என கூறினார்.
தவறு செய்வது தன்னுடைய கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் ஈடுப்பட்ட தமிழக காவல்துறைக்கு பல்வேறு இடங்களில் பாராட்டு கிடைத்தது. காவல்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சான்று, பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது போல் காவல்துறை ஏவல்துறையாக செயல்படவில்லை என விளக்கமளித்தார்.
மேலும், மழை, புயல், வெள்ளத்திற்கு பிறகும் 34 நாட்களாக முதலமைச்சர் களத்தில் உள்ளார். அண்டை மாநில பத்திரிகைகள் பாராட்டும் அளவிற்கு முதலமைச்சர் செயல்படுவது தமிழகத்திற்கு பெருமை என்றும் நீதியரசர் புகழேந்தி கூறியது போல் பாராட்டாவிட்டாலும் வசை பாடாமல் இருக்கலாம் என கூறினார்.