முதல் ஆளாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி... நடுக்கத்தில் மாஜி மந்திரிகள்...

அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்த சொத்துக்குவிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமாரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் ஆளாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி... நடுக்கத்தில் மாஜி மந்திரிகள்...
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு  தொடர்ந்தார். 
 
அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதே போல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும்,4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் இது தொடர்பாக  லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு விசாரணையின் போது,   லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும்,  விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும், அதனால்  விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும் கூறி, வழக்கை முடிக்கவும் பொது துறை உத்தரவிட்டதாதாக கூறப்பட்டு இருந்தது. 
 
இதனையடுத்து   நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி அமைச்சரான பிறகு சேர்த்த சொத்து குறித்து மட்டும் விசாரிக்க கூடாது, 1996 ஆம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி துணை தலைவரானது முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். ஏனென்றால் அவர் 1996 ஆம் ஆண்டே பொது ஊழியராக இருந்துள்ளதாகவும், எனவே இந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
 
அரசு தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்  கூறுகையில்,  ஆரம்ப கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு   அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது  வருமானம்  உள்ளது என கூறினார் . இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த  நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட  தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
 
பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார். இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தும் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இந்த வழக்கை விசாரிக்கும்  நீதிபதியாக  எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. கந்தசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார்கள் விசாரணை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளிவந்துள்ளது. மாஜி மந்திரிகளின் மீதான அதிரடி நடவடிக்கைகள் அடுத்தடுத்து தொடரும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மாஜி மந்திரிகள் கலக்கத்தில் உள்ளனர்.