” அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” - சென்னை உயர்நீதிமன்றம்

” அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” - சென்னை உயர்நீதிமன்றம்

பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்த அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி  கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் வெளியானது. தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருந்தார். இதுசம்பந்தமாக கோவில் இணை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி பழனி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து ஆஜராகி, கோவிலுக்குள் செல்போன்களை கொண்டு சொல்லக்கூடாது என அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளதாக விளக்கம் அளித்தார்.
 
கோவில்களுக்குள் செல்போன் போன்ற கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை அமல்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாதது, அதைப் போல தமிழகத்தில் ஏன் அமல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுத்து, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.

தற்போதைக்கு இதை தடுக்க வேண்டும், செல்போன் கொண்டு வருபவர்களை மலையில் இருந்து இறக்கி விடுங்கள் எனத் தெரிவித்த நீதிபதிகள், பழனி கோவிலில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உள்ளது என்பது குறித்து வரும் வெள்ளிக் கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி, இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டனர்.