பாஜக நிர்வாகி வீட்டில் துப்பாக்கிச்சூடு...போலீசார் விசாரணை

கோவையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் , நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக  நிர்வாகி வீட்டில் துப்பாக்கிச்சூடு...போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் விசாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகன் ஜெகதீஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் குனியமுத்தூர் மண்டல் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஜெகதீஷ் மணல் வியாபாரம் உட்பட தொழில்கள் செய்து வருகிறார். நேற்று காலை தனது மனைவி குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு ஜெகதீஷ் சென்றதாக கூறப்படுகிறது.  

அதனைதொடர்ந்து ஜெகதீஷ் அம்மா வீட்டில் இருந்து இரவு 9 மணி அளவில் மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது  வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையில் காணப்பட்டது. இது தொடர்பாக அவர்,  குனியமுத்தூர் பேரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் இன்று காலை ஜெகதீஸ் வீட்டிற்கு சென்றனர். அப்போது கண்ணாடியில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் இருந்தது. வீட்டிற்குள் விலங்குகளை சுட பயன்படுத்தும் ஏர் கன்னிலிருந்து சுடப்பட்ட  துப்பாக்கி குண்டுகள் சிதறிக் கிடந்தது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிதறிக்கிடந்த 10 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.