சாதி மறுப்பு திருமணம் .... தங்கையின் வளைகாப்பு விழாவில் கத்தியுடன் புகுந்து ரகளை செய்த அண்ணன்...அழைப்பிதழில் தாய், தந்தை பெயர் அச்சிடப்பட்டதால் ஆத்திரம்...!

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் வளைகாப்பு விழாவில், கத்தியுடன் புகுந்த பெண்ணின் அண்ணன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதி மறுப்பு திருமணம் .... தங்கையின் வளைகாப்பு விழாவில் கத்தியுடன் புகுந்து ரகளை செய்த அண்ணன்...அழைப்பிதழில் தாய், தந்தை பெயர் அச்சிடப்பட்டதால் ஆத்திரம்...!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழைய நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த கெளசிகா என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.  கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இந்த காதல் ஜோடி பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

காதல் திருமணம் செய்து கொண்ட பின்பு, கௌசிகா கர்ப்பமான நிலையில், அவருக்கு வளையணி விழா நடத்துவதற்காக, அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் வளையணி விழா அழைப்பிதழ் அச்சிட்ட ஏற்பாடு செய்துள்ளனர்.

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட கௌசிகா,வளையணி விழா அழைப்பிதழில் தனது தாய், தந்தை மற்றும் அண்ணன் அண்ணியின் பெயரை அச்சடித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து,  இன்று விருத்தாசலத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வளையலணி விழா நடைபெற்று கொண்டிருந்தது

அப்போது வளையலணி விழா நடைபெறும் தனியார் மண்டபத்திற்குள், கத்தியுடன் நுழைந்த பெண்ணின் அண்ணன் வினோத் என்பவர், கர்ணன் மற்றும் கெளசிகா-வை கொலை செய்ய முயன்றார். அந்த சமயம் மண்டபத்தில் இருந்த உறவினர்கள் அவரை பிடித்து, கத்தியை அபகரிக்க முயற்சித்தனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளில், கர்ணனின் மாமனான சிலம்பரசனின் வயிற்றில்  கத்தி பாய்ந்துள்ளது.  மேலும் கர்ணனுக்கும், அவரது  மனைவி கௌசிகா -விற்கு பலத்த அடி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து விருத்தாசலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் வந்த போலீசார், வினோத்தை கைது செய்து, கத்திக்குத்து வாங்கிய சிலம்பரசனை அவசர ஊர்தியில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில் பெற்றோரை உதறித் தள்ளிவிட்டு, காதல் திருமணம் செய்துகொண்ட கௌசிகா-வின் உறவு வேண்டாம் என்று ஒதுங்கி இருந்ததாகவும்,  வளையலணி பத்திரிகையில், கௌசிகாவின் தாய் தந்தையர், அண்ணன்- அண்ணியின் பெயர் அச்சடிக்கப்பட்ட தால்,  ஆத்திரமடைந்து  தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகிறது. இச்சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.