பள்ளி மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை கொடுத்த விவகாரம்... ஆசிரியர் ராஜகோபாலன் மீது குற்றப்பத்திரிகை  தாக்கல்

பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை கொடுத்த விவகாரம்... ஆசிரியர் ராஜகோபாலன் மீது குற்றப்பத்திரிகை  தாக்கல்

சென்னை கேகே நகரில் செயல்படும்  பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு அந்தப் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு அளித்ததாக   சமூக வலை தளத்தில் தகவல் வெளியானது.  இது தொடர்பான புகாரின் அடைப்படையில்  கடந்த மே மாதம் 24 ஆம் தேதி காம லீலையில்  ஈடுபட்ட ஆசிரியர் ராஜகோபாலான் கைது செய்யப்பட்டார்.  

போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் அசோக்நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பல மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் தொந்தரவு அளித்ததாக ஏராளமான புகார்கள் காவல் துறைக்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக 17 சாட்சிகளிடம்  விசாரணை நடத்திய அசோக்நகர் மகளிர் காவல் நிலைய போலீசார், ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில்  இன்று தாக்கல் செய்துள்ளனர். இது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அசோக் நகர் மகளிர் போலீசார் தெரிவித்துள்ளனர்.