ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி!

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில்  வில்லாக்கள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வில்லாக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து, 125 வில்லா வகையிலான வீடுகளுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்,  பெங்களூரு சென்ற வழியில் தன்னை சந்தித்த சசிகலா, சில சொத்துக்களை தனது பெயருக்கு  ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது தன்னை சந்திக்க மறுப்பதாகவும், இந்த உயிலை வெளியிடக் கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது சமாதியில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விளம்பர நோக்கத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும், ஏற்கனவே இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு முடித்துவைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இதே போன்ற வழக்கை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:தாம்பரம்: மீட்கப்பட்ட இடத்தில் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட உயர்நீதிமன்றம் உத்தரவு!