பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட துணை மேயர்...!
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் காலை சிற்றுண்டி உணவு தயாரிப்பு பணி மற்றும் கால்வாய் பணிகளை துணை மேயர் நேரில் ஆய்வு
சென்னை மாநகர துணை மேயர் மகேஷ் குமார் இன்று காலை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர். ஆர் நகர் பகுதியில் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தயாரிக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் உணவுகளின் தரம் உள்ளிட்டவற்றை அதிகாரியிடம் கேட்டு அறிந்தார். மேலும் அங்கு சமைக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை பரிசோதனை செய்தார். அதனைத் தொடர்ந்து கொடுங்கையூர் கால்வாய் பகுதியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.
மேலும், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி பகுதியில் உள்ள கேப்டன் கால்வாய் அமைந்துள்ள பகுதியில் செடிகள் முளைத்து தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த பகுதியை ஆய்வு செய்த துணைமேயர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த இடத்தை சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களிடம் காலை உணவின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர் டி சேகர். மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.