ஆளுநர் மாநில அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள தான் கோரிக்கை வைத்துள்ளார், இதில் தவறோ, உரிமை மீறலோ இல்லை -- வானதி சீனிவாசன்
ஆளுநர் மாநில அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள கோரிக்கை வைத்து உள்ளார்.இதில் தவறோ உரிமை மீறலோ இல்லை என பாரதிய ஜனதா கட்சி மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருப்பதாகவும், மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதாக கூறிய அவர் சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
சசிகலா தொடர்பான கேள்விக்கு, சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும் அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்தார்.
தமிழக அரசிடம் ஆளுனர் அறிக்கை கேட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, ஆளுநர் புதிதாக பதவியேற்றுள்ளார். மாநில அரசிடம் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக கோரிக்கை வைத்திருக்கிறார். தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கேட்டு இருக்கிறார். இதில் எந்த தவறோ உரிமை மீறலோ இல்லை எனவும் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது என்றவர், இது வழக்கமாக நடப்பதுதான் என தெரிவித்தார்.