முதலமைச்சர் வீடு முன்பு தீக்குளித்த நபர்... நெஞ்சைப் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு...
சென்னையில் முதலமைச்சர் வீட்டின் முன்பு மதிமுக பிரமுகர் ஒருவர் தீக்குளித்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டின் முன்பு, நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட போலீசார், நொடிப்பொழுதில் அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து காப்பாற்றினர். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், அந்த நபர் தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், சிலர் அவரை தேர்தலில் இருந்து வாபஸ் பெறச்சொல்லி மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்கும், முதலமைச்சரின் வீட்டின் முன்பு அரங்கேறிய இந்த சம்பவம், நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, நெஞ்சை பதற வைத்துள்ளது.