துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை!!!

நேரு உள்விளையாட்டு அரங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை!!!

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.  இவருக்கு திருமணம் ஆகி மனைவி  மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.  கடந்த 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த செந்தில்குமார்  2021 ஆம் ஆண்டு முதல் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்

இன்று வழக்கம் போல தனக்கு ஒதுக்கப்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்கு பாதுகாப்பு பணியில் செந்தில்குமார்  ஈடுபட்டு வந்த நிலையில்  மதியம் கழிவறைக்குள் சென்று தான் வைத்திருந்த  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இது குறித்து  தகவல் அறிந்த சக போலீசார்  ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் ஆயுதப்படை துணை ஆணையர் சௌந்தரராஜன் நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 

மேலும் சம்பவம் தொடர்பாக மதுரையில் உள்ள செந்தில்குமார் பெற்றோர் மற்றும் மனைவிக்கு தகவல் கொடுத்ததுடன், பெரிய மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.மனைவியுடன் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த   காவலர் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.