அத்தியாவசிய காய்கறிகளின் விலை சற்று குறைந்தது... வெங்காயம் கிலோ 40 ரூபாய்...

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. 

அத்தியாவசிய காய்கறிகளின் விலை சற்று குறைந்தது... வெங்காயம் கிலோ 40 ரூபாய்...

வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, காய்கறி விலை கிடு கிடுவென ஏற்றம் கண்டது. இதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து குறைந்ததே காரணம் என கூறப்பட்டது. மேலும் அடை மழையால், செடிகளில் காய் பிடிக்காமல், பயிர்கள் சேதமடைந்தது. இதனால் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி, பெட்ரோலுக்கு இணையாக நூறு ரூபாயை தாண்டி விற்பனையானதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்தநிலையில் தற்போது மழை வெகுவாக குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை குறைந்துள்ளன.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 50  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதேபோல் வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் கிலோ 40 முதல் 75 ரூபாய், பீன்ஸ் கிலோ 60 ரூபாய், முள்ளங்கி கிலோ 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் புடலங்காய், பாவற்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளும் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் விலை சற்று அதிகரித்து கிலோ 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.