விரைவில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர்!

பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

விரைவில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுவரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி, மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், பள்ளி திறந்தவுடன் பள்ளி வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்படுவதோடு, மண்டல போக்குவரத்து அதிகாரி மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். பேருந்து பணிமனைகளில் பணியில் இருக்கும் பணியாளர்கள், தொடர் விடுப்பில் இருப்பதால் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், ஆய்விற்கு பிறகு முறையாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாற்றாக, இ-டிக்கெட் வழங்கும் முறை, இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி, டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.