எதற்கு எனது தாய்க்கு ஃபோன் செய்கிறாய்....வங்கியில் புகுந்து மேலாளரை தாக்கிய மகன்....வைரலாகும் சிசிடிவி.!
நாகை அருகே வங்கி கடன் தொடர்பாக ஃபோன் செய்த மேலாளரை வங்கியின் உள்ளே புகுந்து தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த பாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கமலவேனி. இவர் கொளப்பாடு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் மகளிர் சுய உதவி குழு கடன் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார். அதனை தொடர்ந்து கடன் தொடர்பாக பேசுவதற்காக, வங்கியின் மேலாளர் பிரிதிவிராஜ், கமலவேணியை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது போனை எடுத்த கமலவேனியின் மகன் கோபி ஆனந்த், மாலை 6 மணிக்கு மேல் எதற்கு எனது தாய்க்கு போன் செய்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கமலவேனியின் மகன், கோபி ஆனந்த், வங்கிக்கு சென்று மேலாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் தகராறு கைகலப்பு வரை சென்றுள்ளது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. தற்போது இந்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.