திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிய கிராமநிர்வாக அலுவலர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா...

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் முன்பாக இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிய கிராமநிர்வாக அலுவலர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நன்னாவரம் கிராம நிர்வாக அலுவலராக வருவாய் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மூன்றாண்டுகளாக பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ராம்குமார் தனது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை ஈஸ்வரியை அவரது பெற்றோர் வீட்டில் இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி ஈஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமணமாகி 3 மாதங்கள் ஆகியும் தனது கணவர் ராம்குமார் அழைக்காததால் ஈஸ்வரி இன்று ராம்குமாரின் வீட்டிற்குச் சென்றார்.

அப்போது வீட்டில் இருந்த ராம்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஈஸ்வரியை வீட்டின் வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டனர். தொடர்ந்து ஈஸ்வரி ராம்குமார் வீட்டின் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஈஸ்வரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து ராம்குமாரின் பெற்றோர் அழகேசன் என்பவர் ஈஸ்வரி வெளியே அனுப்பா விட்டாள் தீக்குளிப்பேன் என்று சொல்லி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.