மதுரை சித்திரைத் திருவிழாவி.. வைகை அணையில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
வைகை அணையில் போதுமான நீர் இருந்தால் தண்ணீர் திறப்பதும், இருப்பு இல்லா நேரங்களில் மதுரை வைகை ஆற்றில் பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி அதில் கள்ளழகர் இறங்குவதும் வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரானா காரணமாக களையிழந்திருந்த விழா, வரும் 16-ம் தேதி பக்தர்கள் பங்கேற்புடன் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்தநிலையில் 71 அடி உயர வைகை அணையிலும் கடந்த 9 மாதங்களாக 69 அடி நீர்மட்டம் இருந்து வருகிறது. இதனால் வைகை அணையில் இருந்து நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், தண்ணீர் வேகமாகப் பாய்ந்தோடும் வகையில் இரவு நேரங்களில் மட்டும் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 11-ம் தேதி மாலை 6 மணி முதல் 16-ம் தேதி வரை நீர்திறக்கப்படும் என்றும் இதற்கான அரசு அனுமதி கேட்டு தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைகை அணை நீர் திறப்புத் தகவலால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.