தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சரிவு...

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சரிவு...

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு  நடத்தப்படும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வை எழுத நாடு முழுவதும் 16,14,714 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 15,97,435 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதே வேளையில், நீட் தேர்வை எழுத தமிழ்நாட்டில் இருந்து 1,12,890 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

இதில் தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 19,867 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 8,727 ஆக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை எழுத கடந்த ஆண்டில் 1,21,617 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது. இது தவிர மாநில மொழிகளில் நீட் தேர்வை எழுதுவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது.

குஜராத்தி மொழியில் 49,943 பேரும், பெங்காலியில் 35,118 பேரும், தமிழில் 19,867 பேரும் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்த எண்ணிக்கையான 16.14 லட்சம் பேரில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் மாணவியர் என்ற விவரமும் வெளியாகி உள்ளது.