தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்- அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்-  அருணா ஜெகதீசன்  ஆணையத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தின் 100-வது நாளில்  பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  இந்த ஆணையம் பல்வேறு  தரப்பினரிடம் விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு   தொடர்பான இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார்.  

இந்தநிலையில் ஆணையத்தின் விசாரணைக்கான அவகாசம் முடிய உள்ள நிலையில், அதனை ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் அடுத்த  ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வரை ஆறுமாதம் காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.