கழிவுநீர் கலப்பதை தடுக்க... விரிவான திட்ட அறிக்கை!!

கழிவுநீர் கலப்பதை தடுக்க... விரிவான திட்ட அறிக்கை!!

பக்கிங்காம் கால்வாய்,  கூவம் உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்துள்ளார்.

கழிவுநீர் உந்து நிலையம்:

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தியாகராய நகர் தொகுதி வடபழனி அழகர் நகரில் கழிவு நீரகற்றும் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், சிஐடி நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையத்தின் தேவை இருப்பதாகவும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றார் போல முன் அமைக்கப்பட்ட சிறிய குழாய்கள் மூலமாக அதிக கழிவுகள் செல்ல முடியாமல் குடிநீருடன் கலப்பது பெரும் பிரச்சனையாக உள்ளதால், பழைய கழிவுநீர் பைப் லைன்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

நடைபெறும் பணிகள்:

அதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கழிவுநீர் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளதையடுத்து, ஜனவரி 2020ல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கு கழிவு நீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு:

மேலும், கழிவு நீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுவதால் உந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், இது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும்,மாதவரம், முகப்பேர், ஓட்டேரி, கொரட்டூர், டி. பி சத்திரம், வடபழனி, தி நகர் ஆகிய  பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது என்றும், மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிரச்சனையை சரிசெய்ய 100 கோடி ரூபாய் முதலமைச்சர் நிதி ஒதுக்கியிருப்பதோடு, பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

அதேபோல், பக்கிங்காம் கால்வாய், கூவம் உள்ளிட்ட ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க:   முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை.... அமைச்சர் துரைமுருகன்!!