தமிழக சட்டப்பேரவை வேறு இடத்திற்கு மாற்றம்? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
தமிழக சட்டமன்ற கட்டடத்தை சென்னைக்கு வெளியே மாற்றுவதற்கான பணிகள் எதையும் முன்னெடுக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளை ஊக்குவித்திடும் வகையில், சிறந்த சட்டப்பேரவையை தேர்ந்தெடுத்து விருது வழங்குவது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சபாநாயகர் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் இந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, சட்டமன்ற அலுவல் நேரம், உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நேரம், மசோதா எண்ணிக்கை, மசோதா மீது வைக்கப்பட்ட விவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் சிறந்த சட்டப்பேரவை விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பிரதமர்- முதலமைச்சருக்கு இடையிலான செயல்பாடுகளை 3 வகையாக பட்டியலிட்ட அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமைகளை முறைப்படி பிரதமரிடம் கூறி, அவருக்கு உரிய மரியாதை அளிக்கும் சிறந்த முதல்வராக உள்ளதாகவும் புகழாரம் சூட்டினார். அவரது கோரிக்கையால் தான் அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.