வரி உயர்வை கண்டித்து நவ.9-ல் லாரிகள் வேலை நிறுத்தம் ..!

வரி உயர்வை கண்டித்து நவ.9-ல் லாரிகள் வேலை நிறுத்தம் ..!

மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நவம்பர் 9-ந் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் சம்மேளனத்தின் தலைவர் திரு.தன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்:-

தமிழ்நாட்டில் 6.50 லட்சம் லாரிகள் உள்ளன. தொழில் நெருக்கடி காரணமாக தற்போது 2.50 லட்சம் லாரிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. சுங்க கட்டணம், டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை,  மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் விலை உயர்வால் நாளுக்கு நாள் லாரி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வரி ரூ.500 ல் இருந்து ரூ.750 ஆகவும்,

காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.3,596- ல் இருந்து ரூ. 904 உயர்த்தி ரூ. 4,550 ஆகவும்,

10 சக்கர லாரிகளுக்கு ரூ.4,959 ல் இருந்து ரூ. 2,041 உயர்த்தி ரூ. 7,059 ஆகவும்,

12 சக்கர லாரிகளுக்கு ரூ. 6,373 ல் இருந்து ரூ. 3,327 உயர்த்தி ரூ. 9,170 ஆகவும்,

14 சக்கர லாரிகளுக்கு ரூ.7,787 ல் இருந்து ரூ.3,413 உயர்த்தி ரூ.11,290 ஆகவும்

16 சக்கர லாரிகளுக்கு ரூ. 4,200 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வை மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 9 ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது”, எனத் தெரிவித்தார். 

இதையும் படிக்க   | ”முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு என்று சொல்லிவிட்டு இப்போது கையெழுத்து இயக்கம் என்பது ஏமாற்று செயல்” - ஜெயக்குமார்