கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசம்!!

மதுரை மாவட்டம் மேலவாசல் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசம்!!

திடீர்நகர் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் 500க்கும்  மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது இந்த பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

பல்லாண்டு காலங்களாக இந்த பகுதிக்குட்பட்ட இடத்தில் உள்ள சந்தனமாரியம்மன் என்னும் கோயிலில் வருடந்தோறும் வைகாசி மாதம் மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி வழக்கம் போல் பக்தர்கள் அனைவரும் கோயில் திருவிழாக்களில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் பூப்பல்லக்கு நிகழ்ச்சிக்கு காத்திருந்த போது சில இளைஞர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கே போடப்பட்டிருந்த பந்தலில் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

இதில், இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.