அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு வயது குழந்தை தலை நசுங்கி பலி !
வாலாஜாபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு வயது குழந்தை தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சேர்ந்தவர் பாரூக். இவருக்கு 7 வயதில் அஸ்மா பர்வீன் என்ற மகளும், இரண்டு வயதில் பர்காண் என்ற மகனும் உள்ளனர். இவரது மகள் சுமைதாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மகளுக்கு புத்தகம் வாங்குவதற்காக இவர்கள் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். அப்போது வாலாஜாபேட்டை அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவரது 2 வயது மகன் பர்காண் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.