பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை திறப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்...

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை திறப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்...

தி.மு.க அரசின் அமைச்சரவையில், பல்வேறு கால கட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், தி.மு.க.வின் நீண்டகால பொதுச் செயலாளராக 1977 முதல் 2020 வரை இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். அவர் வயது மூப்பு காரணமாக 2020 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். 

இந்நிலையில், 2021 சட்டபேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துறையின் பெரிய கட்டிடத்திற்கு, முன்னாள் நிதி அமைச்சர் க.அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதனை நிறைவேற்றும் விதமாக, இன்று பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு, பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை, எனப் பெயர்சூட்டப்படுகிறது. மேலும்,  நாட்டுடைமையாக்கப்பட்ட அவரின் நூல்களுக்கு அரசின் நூலுரிமைத் தொகையையும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

மேலும், அவ்வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியரின் மார்பளவு சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் க.அன்பழகன் குடும்பத்தினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.