கன்னியாகுமரி மாவட்ட பேருந்து தேவைகள் குறித்து அமைச்சரை சந்தித்து மனு அளித்தார் விஜய் வசந்த் எம்.பி

கன்னியாகுமரி மாவட்ட பேருந்து தேவைகள்  குறித்து  அமைச்சரை சந்தித்து மனு அளித்தார் விஜய் வசந்த் எம்.பி

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பல்வேறு பேருந்து தேவைகளை பூர்த்தி செய்ய கோரி இன்று மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு.‌ எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில்  சந்தித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த்  கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில்:-

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும், மக்கள் வெளியிடங்களுக்கு பயணிக்கவும் அரசு பேருந்துகளை வெகுவாக நம்பி உள்ளனர். மக்கள் தொகை பெருகி வருவதால் இப்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மற்றும் முக்கிய நகரங்களை கிராமங்களுடன் இணைக்கும் வகையில் பேருந்து வசதிகள் போதிய அளவு இல்லாத நிலை உள்ளது. ஆகையால் அனைத்து ஊரிலிருந்தும் நாகர்கோவில் செல்லவும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லவும் அதிக பேருந்து சேவைகள் செய்து தர வேண்டும். 

ஏராளமான வழித்தடங்களில் இயங்கி வந்த பேருந்துக்குள் தக்க காரணமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நோயாளிகள் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி, RCC, ஸ்ரீ சித்ரா மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கு சிகீட்ஸை தேடி செல்கின்றனர். அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து பேருந்து மாற வேண்டிய கட்டாயம் தற்பொழுது உள்ளது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டும்.. 

 அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோவை திருச்சி போன்ற மாநகரங்களுக்கும், வேளாங்கண்ணி, பழனி போன்ற சுற்றுலா தலங்கள் செல்லவும் போதிய பேருந்து வசதிகள் இல்லை. அதற்கு ஆவண செய்ய வேண்டும்..

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் பேருந்துக்குள் பழுதடைந்த  நிலையில் சாலைகளில் பயணிக்கிறது. அதற்கு பதிலாக நல்ல நிலையில் இயங்கும் பேருந்துக்குள் வழங்க வேண்டும்.

என மனுவில் விஜய் வசந்த் அவர்கள் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க    | பிச்சைகாரனாக இருந்தால் தான் உரிமை தொகை வழங்கப்படும்- சீமான் விமர்சனம்.