உடலுறுப்பு தானத்திற்குக் கிடைத்த இறுதி மரியாதை!!!

உடல் உறுப்பு தானம் செய்த நபரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன்.

உடலுறுப்பு தானத்திற்குக் கிடைத்த இறுதி மரியாதை!!!

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், விக்கிரவாண்டி வட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண் நபர் சாலை விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்துள்ளது.

அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதையொட்டி, அவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவர் 07.09.2022 அன்று மாலை 4.20 மணியளவில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சுயநினைவு இல்லாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உரிய சிகிச்சை அளித்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பின்னர் மயக்கவியல்துறை, நரம்பியல்துறை, பொதுமருத்துவதுறை, ஆகிய வல்லுநர்கள் கொண்ட பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கை மூலமாகவும் மூளைச்சாவு
அடைந்ததை, குழு மேற்கொண்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று 09.09.2022 காலை 5.30 மணியளவில் உடல் உறுப்பு மீட்டெடுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்து இதயம். கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு நுரையீரல், இரண்டு கருவிழி அகற்றப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் இடத்திற்கு வழங்கப்பட்டது.

இதில் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் 8 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உடல் உறுப்பு மீட்டெடுப்பு அறுவை சிகிச்சை அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்
முறையாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி, இறந்தவரது உடலுக்கு மலர் மாலை தூவி மாவட்ட ஆட்சி தலைவர் மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியான சம்பவமாக அப்பகுதியில் அமைந்தது.