ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு...!

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் இம்மாதம் நடைபெறுகிறது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்றும், தெலுங்கானாவில் வரும் 30-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.

ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்க ஆளும் காங்கிரசும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பாஜகவும் நேற்று முன்தினம் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிளில் 199 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால்  அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  

இதற்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே தொடங்கியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொத்தம் 2 ஆயிரத்து 605 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 240 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது, 490 பேர் வாபஸ் பெற்றதால் 183 பெண்கள் உட்பட ஆயிரத்து 875 பேர் போட்டியிட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ள நிலையில், அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.