எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும்...! ஜெயக்குமார் பேட்டி...!!

எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும்...! ஜெயக்குமார் பேட்டி...!!

பா.ஜ.கவிற்கு எதிராக எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயபுரத்தில், அதிமுக நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்றப்பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறினார். சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலவரம், ஊழல்கள், நிதி அமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் தெரிவித்ததாக கூறினார். மேலும், நிதியமைச்சர் ஆடியோ தொடர்பாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் இதுவரை முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பாடலை முழுமையாக பாடவிட்டிருக்க வேண்டும் என கூறினார். 

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நடத்திய மாநாட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய நிர்வாகிகளை ஒருமையில் பேசியதை கண்டித்த ஜெயக்குமார், முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர் நாகரீகம் கருதி பேச வேண்டும் எனவும் ஓ.பி.எஸ் விரக்தியின் உச்சியில் இருப்பதாகவும் விமர்சித்தார். 

தொடர்ந்து, அதிமுகவை பா.ஜ.க நிர்வாகிகள் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், பா.ஜ.க நிர்வாகிகளை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும் என பதிலளித்தார்.