அடுத்து நாங்க தான்.. திமுகவை விட 10 சதவீதம் அதிக வாக்குகளை அதிமுக நிச்சயம் பெறும் - ஜெயக்குமார்
தமிழகத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்பதால் அடுத்து வரும் தேர்தலில் திமுகவை விட 10 சதவீதம் அதிக வாக்குகளை அதிமுக நிச்சயம் பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை ராயபுரம் என்.1 காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆறாவது நாளாக கையெழுத்திட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடியாத அரசை பொறுத்தவரை நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற அவர், அடக்குமுறை தீர்வல்ல, ஜனநாயகத்தில் அடக்கு முறையைக் கையாண்டால் கட்சி சரிவர நடக்காது என்றார். மேலும் திமுக இரட்டை குதிரையில் பயணம் செய்வதை உணர்ந்ததால்தான் டெல்லியில் திறக்கப்பட்ட அறிவாலயம் நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தி வரவில்லை என விமர்சித்தார்.
காவல்துறையை தன்வசப்படுத்தி திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின், துபாய், டெல்லி என சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டார். அதேபோல் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்று குறிப்பிட்ட அவர், அடுத்து வரும் தேர்தலில் திமுகவை விட 10 சதவீதம் அதிக வாக்குகளை நிச்சயம் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.