ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது? - ஓ.பி.எஸ். பரபரப்பு வாக்குமூலம்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது? - ஓ.பி.எஸ். பரபரப்பு வாக்குமூலம்!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு, ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல்முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அவர் அளித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்காதது ஏன் என்ற ஆணையத்தின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்று ஜெயலலிதாவையும் சிசிக்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என அப்போது சி.விஜயபாஸ்கர் சொன்னதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், மறுநாள் காலை அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தியதாகவும், அதற்கு ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என அவர் தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்தார்.

ஆணையத்தில் ஆஜரான ராமமோகன் ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும்,  4 நாட்கள் பரபரப்பாக பேசி, பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருந்ததை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது. 

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ராமமோகன் ராவ் அதுதொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதிலளித்துள்ளார். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் ஆகியோர் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.