வெளிநாட்டில் மர்மமாக இறந்த கணவரின் உடலை மீட்கக்கோரி மனைவி கண்ணீருடன் மனு...!
வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவனின் உடலை மீட்டுத் தரக்கோரி தாய் மகள் கண்ணீருடன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த தாய், மகள் ஆகியோர் வெளிநாட்டில் மர்மமாக இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தனர்.
திருச்சி வடக்கு சித்தாம்பூர் காவேரி பாளையத்தை சேர்ந்தவர் சின்னமுத்து புரவியான் (52). இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த நிவேதா என்ற மகள் உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக சின்னமுத்து சவுதியில் வெல்டர் வேலைக்காக சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அன்று சின்னமுத்து தனது மனைவி அன்னக்கிளி மற்றும் மகளிடம் சவுதியில் இருந்து அலைபேசி மூலம் பேசியுள்ளார். மறுநாள் மனைவி அன்னக்கிளி தனது கணவரிடம் பேச முற்பட்டபோது செல்போன் சுவிட்ச் ஆப்பாகியுள்ளது. அவரது நண்பரிடம் கேட்ட போது உங்களின் கணவர் சவுதியில் காணாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் சவுதியிலிருந்து பேசிய சின்னமுத்துவின் நண்பர், சின்னமுத்துவை சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாக கூறினார். பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். எனவே தனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அவரது மனைவி அன்னக்கிளி மற்றும் மகள் நிவேதா ஆகியோர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கண்ணீர் மல்க அந்த மனுவை அளித்தனர்.