மதுபோதையில் இருந்த கணவனை மரத்தில் கட்டிவைத்த மனைவி...எதிர்பாராதவிதமாக உயிரிழந்த கணவன்....

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, மதுபோதையில் இருந்த கணவனை மனைவி மரத்தில் கட்டிவைத்த நிலையில் அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்

மதுபோதையில் இருந்த கணவனை மரத்தில் கட்டிவைத்த மனைவி...எதிர்பாராதவிதமாக உயிரிழந்த கணவன்....

சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு நரையன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். மதுவுக்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு அனைவருடனும் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் மது குடித்துவிட்டு மனைவி மற்றும் மகள்களுடன் ஜெயக்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டு  நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயக்குமார் மீண்டும் தகராறில் ஈடுபட கூடாது என்பதற்காக அருகில் உள்ள வேப்பமரத்தில் அவரது மனைவி கலா கயிற்றால் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜெயக்குமார் பின் தலையில் காயம் பட்ட நிலையில்  இறந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.