கடல் சீற்றத்தால், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட பைபர் படகுகள்!

கடல் சீற்றத்தால், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட பைபர் படகுகள்!

கன்னியாகுமரி:  மீனவ கிராமங்களை சேர்ந்த 12-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள், இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில், சில படகுகள் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.

தமிழகத்தில் நிலவி வரும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதுபோல, தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், நேற்றிலிந்து பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றத்துடனே காணப்படுகிறது. கடல் பகுதியில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. 

இதனால், குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 12-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள், இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படுகுகளில், சில படகுகள் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, மீனவர்கள் அப்படகுகளை கடலுக்குள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.