தளர்வுகள் மட்டும்தான்.. இயல்புநிலை திரும்பியதாக நினைத்து வெளியில் சுற்றுவோரை கட்டுப்படுத்துங்க… உயர்நீதிமன்றம் உத்தரவு!!

ஊரடங்கில் இருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தளர்வுகள் மட்டும்தான்.. இயல்புநிலை திரும்பியதாக நினைத்து வெளியில் சுற்றுவோரை கட்டுப்படுத்துங்க…  உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தாக்கலான அறிக்கையில், நாய்களுக்கு 2,500 கிலோ உணவு வழங்கப்பட்டு, அவற்றை வழங்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 104 குதிரைகளுக்கு 3,536 கிலோ கோதுமை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணக்கில் 19.29 லட்சம் ரூபாய் இருப்பிலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான விஞ்ஞானபூர்வ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

தொடர்ந்து, ஊரடங்கில் இருந்து தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, ஆனால் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல் பொதுமக்கள் நடந்து கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் எனவும், மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் உணரும் வகையில், வெளியில் சுற்றித் திரியக்கூடாது எனவும் ஒலிப்பெருக்கிமூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.