மார்பிங் படத்தால் தற்கொலை செய்த மாணவி,. சகமாணவர்களை அடித்து உதைக்கும் கல்லூரி மாணவர் - வெளிவந்த வீடியோக்களால் அதிர்ச்சி.!  

மார்பிங் படத்தால் தற்கொலை செய்த மாணவி,. சகமாணவர்களை அடித்து உதைக்கும் கல்லூரி மாணவர் - வெளிவந்த வீடியோக்களால் அதிர்ச்சி.!  

கோவை சிங்காநல்லூரில் கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் செல்போனில் இருந்து பல அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், உப்பிலிபாளையம் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 13ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை  செய்து கொண்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் வீட்டிற்கு அருகில் அறை எடுத்து தங்கி படித்த வந்த மானாமதுரையைச் சேர்ந்த கேசவ்குமார் என்ற மாணவர், மாணவியை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும், மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதால் அச்சமடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

இதனையடுத்து கேசவகுமாரையும், அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது தாயார் மங்கையர்கரசியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கேசவகுமாரின் செல்போனில் இருந்த வீடியோக்களைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்லூரி மாணவர்களை கொடூரமாக தாக்கி அவர்களிடம் பணம் பறிப்பது, சாலையில் கும்பலாக சண்டையிடுவது என கல்லூரியில் அவன் செய்த ரவுடிசத்திற்கான காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. 

மேலும், கையில் கத்தியுடன் டிக்டாக் வீடியோக்கள் பல எடுத்து வைத்திருக்கும் கேசவகுமார், ஜூனியர் மாணவர்களின் அறைக்கு சென்று அவர்களை மிரட்டி, கண்மூடித்தனமாக தாக்குவதும், அவர்களிடம் மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி, மாணவிகளை மிரட்டி பணம் பறிப்பதையும், வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.