நீட் எதிர்ப்பு போராட்டம்: உட்கட்சி பூசல்... உண்ணாவிரதத்தை புறக்கணித்த எம்எல்ஏ!!

நீட் எதிர்ப்பு போராட்டம்: உட்கட்சி பூசல்... உண்ணாவிரதத்தை புறக்கணித்த எம்எல்ஏ!!

நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து போடாத ஆளுநரை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வரும் நிலையில், கடலூரில் நடந்து வரும் போராட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக, கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி அண்மையில் நீட் தோ்வு குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வைத்து ஆலோசனை நடத்தினாா். அப்போது பேசிய அவா் இனி எக்காரணத்தை கொண்டும் நீட் தோ்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இடமாட்டேன் என தொிவித்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு அடுத்த நாளே குரோம்பேட்டையில் நீட் தோ்வில் தோல்வியடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். இதில் துக்கம் தாழாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.  

இந்த சூழ்நிலையில் நீட் தோ்வு விலக்கு குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் திமுகவினா் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே திமுக சார்பில் நடந்து வரும் போராட்டத்தில், அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சி.வே. கணேசன், மற்றும் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்கவில்லை.

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திற்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கும் இடையே உள்ள உட்கட்சி விவகாரம் காரணமாக உண்ணாவிரத போராட்டத்தை புறக்கணித்தாரா எம்எல்ஏ என்ற சந்தேகம், உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

திமுக சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டம் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி 40% ஆக உயர்வு!!